தர்மபுரி, ஏப்.3: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று அனல் காற்று வீசிய நிலையில், 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியிருந்தது. சுட்டெரிக்கும் அனல் காற்றுக்கு பயந்து பொதுமக்கள் தங்கள் வீடுகளில் முடங்கினர். தர்மபுரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் ஏப்ரல் மாதத்தில் வரவேண்டியது, பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே வந்துவிட்டது. மாவட்டத்தில் கடந்த ஒருமாதமாக வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மதிய நேரத்தில் அனல் காற்று வீசுகிறது. வீடு, அலுவலகங்களில் மின்விசிறி ஓடினாலும் அனல்காற்று வீசுகிறது. பகல் நேரத்தில் சாலைகள் வாகனம் மற்றும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. தார் உறுகி ஓடும் நிலை உள்ளது. கடும் வெயிலால் தர்பூசணி, இளநீர், நுங்கு விற்பனை அதிகரித்து உள்ளது. சாலையோரங்களில் புதியதாக குளிர்பான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. நுங்கு, வெள்ளரிக்காய் விற்பனை சுறுசுறுப்பு அடைந்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் 98.6 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவில் இருந்த வெயில், படிப்படியாக உயர்ந்து கடந்த 29ம்தேதி 102.2 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியது. 30ம்தேதியும் அதே நிலை தொடர்ந்தது. 31ம்தேதி 100.4 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. இந்த நிலையில் நேற்று 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியது. இவ்வாறு வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
The post தர்மபுரியில் அனல்காற்று வீசியதால் மக்கள் அவதி appeared first on Dinakaran.